நிலநடுக்கம் அல்லது பூகம்பம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்படும் போது, தளத்தட்டுகள் நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இதனை டெக்டோனிக் தட்டுகள் என்று கூறலாம். இந்த அதிர்வுகள் ரிக்டர் அளவு நிலநடுக்கமானியினால் அளக்கப்படுகிறது. அந்த வகையில் அதிர்வுகள் 3 ரிக்டருக்கும் குறைவாக இருந்தால் நிலநடுக்கங்களை உணர்வது கடினமாகும். லேசான நிலநடுக்கம் ஏற்படும். அதேவேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பதிவாகியிருந்தால் அது பூமியில் பலத்த சேதம் மற்றும் சுனாமியை ஏற்படுத்தும்.
டெக்டோனிக் தட்டு என்றால் என்ன, அவற்றின் இயக்கம் பூகம்பங்களை எவ்வாறு ஏற்படுத்துகிறது?
பூமியின் பல பகுதிகளிலும், புவி அதிர்ச்சிகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கின்றன. எனினும் அந்த அதிர்ச்சி ஓரிடத்தில் மிகுதியானால், அதைப் பூகம்பம் என்பர். நமது பூமியின் லித்தோஸ்பெரிக் மேற்பரப்பு டெக்டோனிக் தட்டை உருவாக்குகிறது. இந்த தட்டுகள் பெரிய, ஒழுங்கற்ற வடிவிலான திடமான பாறைகளாகும். அவை கண்டம் மற்றும் கடல்சார் லித்தோஸ்பியரால் ஆனவை. அதாவது, பூமியின் மேற்பரப்பு, மலைகளும், குன்றுகளும், பள்ளத்தாக்குகளும், சமவெளிகளும், ஆறுகளும், கடல்களும் நிறைந்தது. கடினமான பாறைகள் காற்றாலும், ஆறுகளாலும் சிறிது சிறிதாக உடைக்கப்பட்டு மலையடிவாரங்களில் தட்டுகளாக படிகின்றன. இதே செயல்முறை ஆண்டுதோறும் நடப்பதால் டெக்டோனிக் தட்டுகள் ஒன்றன் மீது ஒன்றாகப் படிகின்றன.இந்த டெக்டோனிக் தட்டுகள் தொடர்ந்து மெதுவாக நகரும் போது அவை உராய்வு காரணமாக அவற்றின் விளிம்புகளில் சிக்கிக்கொள்ளும். விளிம்பில் உள்ள அழுத்தம் உராய்வைக் கடக்கும்போது, அது பூகம்பத்தை விளைவிக்கும். அத்தகைய எதிர்வினை பூமியின் மேலோடு வழியாக அதாவது பூமியின் இடைபடுகை வழியாக பயணிக்கும் அலைகளின் வடிவத்தில் ஆற்றலை வெளியிடுகிறது. இது இறுதியில் பூமியின் மேற்பரப்பான நிலப்பரப்பை உலுக்குகிறது. இந்த பூகம்பம் சம அளவிலான ஒரே மூலத்தால் உருவாக்கப்பட்டு பூமிக்குள்ளேயே அல்லது அதன் மேற்பரப்பில் பரப்பப்படுவதால் அவை நில அதிர்வு அலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
பூகம்பம் எதை உருவாக்குகிறது?
பூகம்பங்கள் நான்கு முக்கிய வகை மீள் அலைகளை உருவாக்குகின்றன. அவற்றில் இரண்டு பூமிக்குள் பயணிக்கும் உடல் அலைகள் என்று அழைக்கப்படுகின்றன. மற்ற இரண்டும் பூமியின் மேற்பரப்பில் பயணிப்பதால் மேற்பரப்பு அலைகள் என்று அழைக்கப்படுகின்றன. நில அதிர்வு அலைகளின் வீச்சு மற்றும் அதிர்வெண் ஆகியவை நிலநடுக்கமானி எனப்படும் ஒரு கருவியால் பதிவு செய்யப்படுகிறது. இந்த கருவிகள் பூமி மற்றும் அதன் மேற்பரப்பு அமைப்பு பற்றிய தகவல்களை பதிவுசெய்து வழங்குகின்றன. மேலும் மனிதர்கள் மேக்கொள்ளும் சில நடவடிக்கைகள் மூலம் சில செயற்கையான நில அதிர்வுகள் ஏற்படுகின்றன.பூமிக்கடியில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு போன்றவற்றை சேகரிப்பதற்காக மனிதனால் செயற்கையான முறையில் சிறிய பூகம்பங்களும் உருவாக்கப்படுகின்றன. நில அதிர்வு ஆய்வுகளின்படி, செயற்கையான நில அதிர்வு அலைகள் மூலம் தான் சில புதைபடிவ எரிபொருள் தொழில்கள் இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரி பற்றிய தரவைக் கண்டுபிடிக்கின்றன என்பது தெரியவந்துள்ளது. இயற்கையான பூகம்பங்கள் பொதுவாக புவியியல் மாற்றங்களால் நிகழ்கின்றன. அவை பூமியின் மேலோட்டத்தின் அதாவது இடைப்பகுதியில் உள்ள பாறைகளில் ஒரு பிளவை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாகவே பூமியின் நிலப்பரப்பில் அதிர்வுகள் ஏற்படுகின்றன.