தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால் ஆவணங்கள் இல்லாமல் 50,000 ரூபாய் வரை மட்டுமே ரொக்கப்பணம் எடுத்து செல்ல வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சத்ய பிரதா சாகு , தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால்,பறக்கும் படை சோதனைகளை தொடங்க அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்படப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் மொத்தம் 88,963 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதில் 6000 முதல் 7000 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என முதல்கட்டமாக கண்டறியப்பட்டுள்ளதாக கூறிய அவர், போட்டியிடும் வேட்பாளர்களை பொறுத்து இதன் எண்ணிக்கை மாறும் என்றும் குறிப்பிட்டார்.
45 கம்பெனி துணை ராணுவப்படை முதல் கட்டமாக தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தேவைப்பட்டால் கூடுதல் துணை ராணுவப்படையினர் தமிழகம் வருவார்கள். மக்களவை தேர்தலின் போது ஆவணங்கள் இல்லாமல் 50000 ரூபாய் வரை ரொக்கப்பணம் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டது. அது தற்போதும் தொடரும். அதே நேரத்தில் உரிய ஆவணங்களுடன் கூடுதல் பணத்தை எடுத்து செல்ல அனுமதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம், இதன் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சத்ய பிரதா சாகு தெரிவித்தார்.