இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழு கூட்டம் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இதில் பாசிசத்திற்கு எதிராக வாக்குகள் சிதறாமல் இருக்க திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரிப்பது என முடிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து இன்று காலை திமுக தலைவர் உடனான சந்திப்புக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இன்று மதியம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், துணை தலைவர் முஹம்மது முனீர், பொதுச்செயலாளர் முஹம்மது சித்தீக், துணை பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி, மாநில செயலாளர்கள் அபூ பைசல், தக்வா முகைதீன், கலிமுல்லாஹ் ஆகியோர் சந்தித்தனர்.
இந்த சந்திப்பு கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய சமுதாயத்தின் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார்கள். திமுக ஆட்சிக்கு வந்த உடனே அனைத்தும் நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டது. திமுக கூட்டணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆதரவு கடிதமும் வழங்கப்பட்டது.
கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ள அம்சங்கள் :
- தமிழக முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் 7 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
- கட்டாய திருமண பதிவுச் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
- 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடி கொண்டிருக்கும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும்.
- வக்ப் சொத்துகளை மீட்டு முஸ்லிம்கள் இடத்தில் ஒப்படைக்க வேண்டும்.
- ஹஜ் பயணிகளுக்கு வசதியாக தமிழக ஹஜ் கமிட்டி மூலமாக பயணம் செய்பவர்களுக்கு புதிதாக சென்னை, மதுரை விமான நிலையங்கள் அருகில் கட்டிடம் கட்டி தர வேண்டும்.
- CAA.NRC.NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களை மத்திய அரசு அமல் படுத்த கூடாது அதற்கு தாங்கள் உறுதி பட வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை அடங்கிய கடிதத்தை நிர்வாகிகள் வழங்கினார்கள்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அதிகாரப்பூர்வ வார இதழ் மக்கள் ரிப்போர்ட் பத்தரிக்கையை திமுக தலைவருக்கு மாநில நிர்வாகிகள் வழங்கினார்கள். சந்திப்புக்கு பின்னர் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவது குறித்து பத்தரிக்கையாளர்களை சந்தித்து எஸ்.எம். பாக்கர் பேட்டி அளித்தார்.
இந்த சந்திப்பின் உடன் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, கே.என் நேரு, திருச்சி சிவா MP மற்றும் திமுக முண்ணனி நிர்வாகிகள் ஆகியோர் இருந்தனர்.



