தமிழகம் முழுவதுமுள்ள 234 தொகுதிகளிலுள்ள தேர்தல் நடத்தும் அலுவலகர்களின் அலுவலகங்களிலும் வேட்புமனுத் தாக்கல் மார்ச் 13-ம் தேதி 11 மணிக்கு தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க துணைத்தலைவர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
அதனையடுத்து, ஒவ்வொருவரின் சொத்து விவரம் தெரியவந்துள்ளது. அதன்படி நாம் தமிழர் கட்சிதலைவர் சீமான் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில், ‘அவருடைய அசையும் சொத்தும் 31,06,500 ரூபாயும், அசையா சொத்து ஏதுமில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவருடைய மனைவிக்கு அசையும் சொத்து 63,25,031 ரூபாயும், அசையா சொத்து 25,30,000 ரூபாயும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 65,500 ரூபாய் மட்டுமே வருமானம் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 2019-2020-ம் ஆண்டு வருமானம் 1,000 ரூபாய் மட்டுமே என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.