ஐந்து மாநில தேர்தல்களில் பாஜகவுக்கு எதிராகப் பிரசாரம் செய்ய விவசாய தலைவர்கள் தொடங்கியுள்ள நிலையில், தலைநகரிலும் போராட்டம் 112ஆவது நாளாக தொடர்கிறது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாகப் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகரை முற்றுகையிட்டுத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த நவம்பர் 27ஆம் தேதி தலைநகரை முற்றுகையிட்ட விவசாயிகள், அங்கேயே தங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இதுவரை எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
மத்திய அரசு விவசாய சட்டங்களை அதிகபட்சமாக 18 மாதங்கள் வரை நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக அறிவித்தது. இருப்பினும், விவசாய சட்டங்கள் நிரந்தரமாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயச் சங்கங்கள் அறிவித்துள்ளன.
மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றும் பல வாரங்கள் ஆகிவிட்டன. இந்நிலையில், நடைபெறும் ஐந்து மாநில தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை எதிர்த்து விவசாயிகள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்கட்டமாக மேற்கு வங்கத்தின் நந்திகிராம் தொகுதியில் விவசாயச் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் பிரசாரத்தில் ஈடுபட்டார். வரும் நாட்களில் அவர் மேற்கு வங்கம் முழுவதும் பாஜகவுக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.
மறுபுறம் தலைநகர் டெல்லியின் மூன்று நுழைவாயில்களிலும் விவசாயிகள் போராட்டம் நடைபெறுகிறது. இன்று 112ஆவது நாளாக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.