தமிழக சட்டமன்றத்தேர்தல் திட்டமிட்டப்படி நடைபெறும் என்றும் கொரோனா பாதித்தவர்கள் கடைசி ஒரு மணி நேரம் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு பேசியதாவது: “ ஒட்டுமொத்தமாக 7,255 வேட்புமனுக்க தாக்கல் செய்யப்பட்டது. இதில் 4, 512 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 2,743 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுள்ளது. தமிழகத்தில் 6,29,43,512 வாக்களர்கள் உள்ளனர். இதில் 3.09 கோடி ஆண் வாக்களர்கள். 3.19 கோடி பெண் வாக்காளர்கள். மற்றும் 7,192 திருநங்கைகள் உள்ளனர். 83.99 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
1.70 கோடி மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 0.57 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 231.63 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பண விநியோகம் மற்றும் விதிமுறை மீறல்கள் ஏதேனும் நடந்தால் சிவிஜில் செயலி மூலம் புகைப்படம் அல்லது வீடியோ ஆதாரத்துடன் புகார் செய்ய முடியும். இதுவரை இந்த செயலி மூலம் 1,971 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதில் 1,368 புகார்கள் உண்மைத்தன்மை வாய்ந்தது என்பது கண்டறியப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பரப்புரை வாகனங்கள் தொடர்பாக 6,598 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 515 காவல் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கரூர், கோவை, சென்னை, நாமக்கல், மாவட்டங்களிலிருந்து தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக அதிக புகார்கள் வந்துள்ளன. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவின் போது கடைசி ஒரு மணி நேரம் கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும்’ என்று அவர் தெரிவித்தார்.