நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் 6 தொகுதியில் போட்டியிடுகிறது. இதில் பட்டுக்கோட்டை தொகுதியில் அதிமுக-பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் என்.ஆர். ரங்கராஜன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் என்.ஆர். ரங்கராஜனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித்தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே. வாசன் இன்று அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய ஜி.கே. வாசன், மீனவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் முதலில் குரல் கொடுப்பது தமிழ் மாநில காங்கிரஸ்தான் என்றும், அதிமுக அரசு மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படுவதாகவும் கூறினார். மேலும் நடைபெற இருக்கிற சட்டமன்ற தேர்தலில் அதிரை மக்களின் நம்பிக்கையை பெற்ற என்.ஆர். ரங்கராஜனுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த பிரச்சாரத்தில் தமாகா நிர்வாகிகள், தொண்டர்கள், அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.









