எங்க மேல பல பேர் போகிற போக்கில் சேற்றைவாரி வீசிட்டு போறாங்க என்ற மன குமுறல் சாதாரண மக்களைப்போல் ஆரம்பத்தில் எங்களுக்கும் இருந்தது. ஆனால் இந்த சமூகத்தை அனுபவம் என்னும் புத்தகத்தின் மூலம் படித்து தெளிவுபெற்றதும் மனக்குமுறல் எல்லாம் சிட்டாய் பறந்துவிட்டது.
முதலில் திமுகவின் இணையதளம் அதிரை எக்ஸ்பிரஸ் என்றனர், ஆனால் சின்ன அமேசான் காடு, காஸ்டிக் சோடா போன்ற திமுகவுக்கு எதிரான செய்திகளை அதிரை எக்ஸ்பிரஸ் வெளியிட்டதை பற்றி பேச அவர்களின் மூளை வேலை செய்யவில்லை.
பின்னர் அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்தால் சமூகத்திற்கு பயனில்லை என கூறினர். அதேசமயம் அதிரை சாயின்பாக் போராட்டத்தை லட்சக்கணக்கான மக்களிடம் அதிரை எக்ஸ்பிரஸ் கொண்டு சேர்த்தது குறித்து இவர்கள் பேச மறைந்தனர்.
ஆளுங்கட்சியின் புல்லாங்குழல் அதிரை எக்ஸ்பிரஸ் என கொக்கறித்தனர், ஆனால் அதிரை கல்லூரிக்கு வந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியனை மக்கள் விரட்டி அடித்ததை ஆரம்பம் முதல் இறுதிவரை அதிரை எக்ஸ்பிரஸ் நேரலை செய்ததை பற்றி குறிப்பிட அவர்கள் தயாராக இல்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக அதிரையில் கேஸ் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 50லட்சத்திற்கும் மேல் முறைகேடு நடப்பதாக சாமானியர்களின் குரலாய் அதிரை எக்ஸ்பிரஸ் துணிந்து ஒலித்ததன் மூலம் ஓரளவு விழிப்புணர்வுமிக்க சமூகத்தை உருவாக்கினோம் என்ற ஆறுதல் எங்களுக்கு கிடைத்திருக்கிறது.
கஜா கோரத்தாண்டவமாடிய சமயத்தில் மக்களின் தேவை அறிந்து சேவை செய்தது அதிரை எக்ஸ்பிரஸ். அதுவும் விமர்சன புலிகளின் கண்ணில் படவில்லை.
இதற்கிடையில் அதிரை எக்ஸ்பிரசை ஆரோக்கியமாக விமர்சிக்காமல் மனதில் நஞ்சினை கொண்டு செயல்பட்டவர்கள் எல்லாம் காலம் எனும் பெருவெள்ளத்தில் சுருட்டி செல்லப்பட்டனர்.
இந்நிலையில் தான் இறைவனின் அருளால் 14 ஆண்டுகளை கடந்து 15ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது அதிரையர்களின் இணையத்துடிப்பான உங்களின் அதிரை எக்ஸ்பிரஸ்.
இவற்றையெல்லாம் விட எங்களுக்கு மன நிம்மதியை கொடுத்த ஒன்று உள்ளது. அது தான் கிட்னி பாதிக்கப்பட்டோருக்கான டயாலிசிஸ் மையத்தை அதிரையில் அமைக்க ஷிஃபா மருத்துவமனைக்கு உறுதுணையாக இருந்து அதில் வெற்றி கண்ட நிகழ்வு.