கொரோனா தொற்று பரவல் மிக தீவிரம் அடைந்துள்ள நிலையில், கர்நாடகாவில் நாளை இரவு முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் 34,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது, இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13.39 லட்சத்தை கடந்தது. அதேபோல், நேற்று ஒரே நாளில் 143 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 14,426ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, மாநிலத்தில் 20 சதவீதம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து, நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை பிறப்பித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் அடுத்த 14 நாட்களுக்கு அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் வர அனுமதிக்கப்படுவார்கள். மேலும் நாளை இரவு 9 மணி முதல் மே 10 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் என 4 மணி நேரம் மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்ய கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படும். பொது போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது எனவும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.