மே 2-ம் தேதியன்று கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க நேரிடும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீதான அதிருப்தியையும் உயர்நீதிமன்றம் வெளிப்படுத்தியது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த 6-ம் தேதி நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மே 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்நிலையில், 77 வேட்பாளர்கள் போட்டியிடும் கரூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிடக் கோரி, போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில், வேலாயுதம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளதாகவும், இரண்டு அறைகளில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளதாகவும், கொரோனா 2-வது அலை பரவி வரும் நிலையில், 77 வேட்பாளர்களின் முகவர்களையும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கும் போது, தனி மனித விலகல் பின்பற்ற முடியாத நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்கு எண்ணிக்கையை மூன்று அறைகளில் நடத்த வேண்டும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் முகவர்களை அனுமதிக்க வேண்டும், மருத்துவ குழுவை பணியமர்த்த வேண்டும், கிருமிநாசினி வைக்க வேண்டும், முக கவசம் அணியாதவர்களை அனுமதிக்க கூடாது எனக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை எனக் கூறியுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 4900 சதுர அடி மற்றும் 3 ஆயிரத்து 400 சதுர அடிகளில் இரண்டு அறைகள் வாக்கு எண்ணிக்கைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் தவிர மற்ற சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் முகவர்களை அனுப்பப்போவதில்லை என்றும் கூறினார். மேலும் வாக்கு எண்ணிக்கை காக ஆறு கூடுதல் மேஜைகள் போடப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே கொரோனா பரவலின் தற்போதைய நிலைக்கு தேர்தல் ஆணையம் தான் காரணம் என கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி, வாக்கு எண்ணிக்கையின் போது தடுப்பு விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டும் அதை நடைமுறைப்படுத்தவில்லை என தேர்தல் ஆணையம் மீது அதிருப்தி தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாகவே பொறுப்பற்ற முறையில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வந்ததாகவும் கட்டுப்படுத்தல் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத அரசியல் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்காக தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.