தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்னும் சில மணி நேரங்களில் வெளியாக உள்ள நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கருணாநிதி நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திமுகவிற்கு சாதகமாக வந்துள்ள நிலையில் ரிசல்ட் வருவதற்கு முன்னதாக கருணாநிதி நினைவிடம் சென்று மரியாதை செலுத்தியுள்ளார் மு.க ஸ்டாலின்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் 75 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு நடைபெற்ற நாளில் இருந்தே வேட்பாளர்களும் முகவர்களும் தூக்கத்தை தொலைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில மணிநேரங்களே உள்ளன. மே 2ஆம் தேதி ஞாயிறு காலை 8 மணியில் இருந்து வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.