தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அஸ்ஸாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. தமிழகத்தில் திமுகவும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது. புதுச்சேரியில் ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அஸ்ஸாமில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
கேரளாவில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியமைக்கப்போவது உறுதியாகி உள்ளது. அங்கு மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 139 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் வெளியாகி உள்ளது. அதில் கம்யூனிஸ்டுகள் 93 இடங்களில் முன்னிலை வகிக்கிறார்கள். காங்கிரஸ் கூட்டணி 44 இடங்களிலும், பாஜக கூட்டணி 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
கட்சி வாரியாக ஒவ்வொரு கட்சியும் எத்தனை இடங்களில் முன்னிலை வகிக்கின்றன என்பதை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ கணக்கின்படி பார்ப்போம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 55 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் 16 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இந்திய தேசிய காங்கிரஸ் 24 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 13 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. கேரள காங்கிரஸ் (எம்) 6 இடங்களிலும், சுயேட்சைகள் 7 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும், கேரள காங்கிரஸ் 4 இடங்களிலும், கேரளா காங்கிரஸ்(எம்), கேரள காங்கிரஸ்(பி) நேஷ்னலிஸ்ட் காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 26.50% வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. அடுத்ததாக காங்கிரஸ் கட்சி 24.74% வாக்குகளை பெற்று 2 வது இடத்தை பிடித்துள்ளது. பாஜக 11.67% வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக IUML 7.19% வாக்குகளும், சிபிஐ 6.75% வாக்குகளும் பெற்றுள்ளன. கேஇசி (எம்) கட்சி 3.91% வாக்குகள் பெற்றுள்ளது.
கேரளா முதல்வர் பினராயி விஜயன், சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா உள்ளிட்ட பல்வேறு இடதுசாரி தலைவர்கள் முன்னிலையில் உள்ளனர். தர்மடம் தொகுதியில் பினராயி விஜயன் முன்னிலையில் இருப்பதன் மூலம், கேரளாவில் மீண்டும் பினராயி விஜயன் தலைமையிலான எல்டிஎப் அரசு அமைவது உறுதியாகியுள்ளது.