தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 20,935 பேருக்கு கொரோனா செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஒரே நாளில் மாநிலத்தில் 122 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி தான் மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்திருந்தது. இந்நிலையில் வெறும் 15 நாட்களில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனாவை கட்டுப்படுத்துவது என்பது இன்னும் சில தினங்களில் ஆட்சி அமைக்கும் திமுகவுக்கு பெரும் சவாலாகவே இருக்கும். இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய அதிகாரிகளுடன் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை நடத்தினார். தடுப்பு நடவடிக்கைகள் முழு முனைப்புடன் நடைபெற்றிட வலியுறுத்தியதாக ஸ்டாலின் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்டாலின் தனது ட்விட்டரில், தமிழகத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வரும் இச்சூழலில் இத்தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர், வருவாய்த்துறை செயலாளர், பேரிடர் மேலாண்மை ஆணையர் மற்றும் பிற சுகாதாரத்துறை அலுவலர்களோடு இன்று எனது இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தின் போது, கொரோனா தடுப்பு மற்றும் மருத்துவச் சிகிச்சைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் எந்தவிதமான தொய்வுமின்றி முழு முனைப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தினேன். தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் அதிக பாதிப்பு உள்ளவர்களுக்குச் சென்னையில் ரெம்டெசிவிர் போன்ற மருந்துகள் அரசால் வழங்கப்படுகிறது. அதேபோல தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களிலும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன்.
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவச் சிகிச்சைகளுக்குத் தேவையான படுக்கை வசதிகள் ஆக்சிஜன் மற்றும் மருந்து பொருட்கள் அனைத்தும் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலில் 125 இடங்களில் வென்றுள்ள திமுக, இன்னும் சில தினங்களில் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


