திமுக கூட்டணி தமிழக சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில், மு.க. ஸ்டாலின் இன்று முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து முதல்வராக பதவி ஏற்ற ஸ்டாலின் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
முக்கியமாக தலைமை பொறுப்புகளை வகிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளை மிக கவனமாக ஸ்டாலின் தேர்வு செய்து வருகிறார். அதன்படி முதல்வர் ஸ்டாலினின் முதன்மைச் செயலாளராக உதயசந்திரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் உமாநாத், எம்.எஸ்.ஷண்முகம், அனு ஜார்ஜ் ஆகியோரும் முதல்வரின் முதன்மை செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி வெ.இறையன்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராஜிவ் ரஞ்சன் தமிழ்நாடு செய்தித்தாள் கழகத்துக்கு மாற்றபட்டுள்ளார். இதுவரை பல பொறுப்புகளில் ஐஏஎஸ் அதிகாரி வெ.இறையன்பு பணியாற்றி உள்ளார். உதவி ஆட்சியர், நாகப்பட்டினம், இணை ஆணையர், நகராட்சி நிர்வாகம், கூடுதல் ஆட்சியர், கடலூர் மாவட்டம்,, தனி அலுவலர், எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, இயக்குநர், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை, மாவட்ட ஆட்சியர், காஞ்சிபுரம், கூடுதல் செயலர், முதலமைச்சரின் செயலகம், செயலர், செய்தி மற்றும் சுற்றுலாத் துறை, செயலர், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை, தலைமை இயக்குநர் (பயிற்சி) மற்றும் இயக்குநர், அண்ணா மேலாண்மை நிலையம் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தவர் ஐஏஎஸ் அதிகாரி வெ.இறையன்பு.
நீண்ட அனுபவம் கொண்ட வெ.இறையன்பு நிர்வாக ரீதியாக எந்த கரையும் படியாதவர். அதேபோல் மக்களோடு, மக்களாக, எளிமையாக பழக கூடியவர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த இவர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த சமயங்களில் அதிகம் கவனிக்கப்பட்டார். ஆட்சியியல் தாண்டி, இவர் எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும் கவனம் பெற்றவர். 100க்கும் மேற்பட்ட புத்தங்களை இதுவரை இறையன்பு எழுதியுள்ளார்.
விவசாயத்தில் இளங்கலைப் பட்டம், வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டம் உட்பட 8க்கும் மேற்பட்ட பட்டங்களை இவர் வாங்கி இருக்கிறார். குடியுரிமைப் பணித் தேர்வில் இந்திய அளவில் 15-ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தை பெற்று இவர் ஐஏஎஸ் ஆனார். திமுகவின் குட்புக்கில் இருந்தவருக்கு தற்போது தலைமை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.