தமிழ்நாட்டில் சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை தேர்வு செய்து சுதந்திர தின விழாவில் விருது வழங்குவது வழக்கம். அதன்படி வருகிற சுதந்திர தின விழாவில் பரிசு-விருது பெறும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை தமிழக அரசு தேர்வு செய்து அறிவித்துள்ளது.
இதில் தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.25 லட்சம் மற்றும் விருது அந்த மாநகராட்சிக்கு வழங்கப்படுகிறது. கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விருதுகளை வழங்குகிறார்.
சிறந்த நகராட்சிக்கான விருது ஊட்டி நகராட்சிக்கு கிடைத்துள்ளது. இதற்கு முதல் பரிசாக ரூ.15 லட்சமும், விருதும் வழங்கப்படுகிறது. 2-ம் இடமாக திருச்செங்கோடு நகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.10 லட்சம்-விருது வழங்கப்படுகிறது. 3-வது இடத்துக்கான பரிசு சின்னமனூர் நகராட்சிக்கு கிடைத்துள்ளது. இதற்கு ரூ.5 லட்சம்-விருது வழங்கப்படுகிறது.
இதே போல் திருச்சி மாவட்டம் கல்லக்குடி பேரூராட்சிக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சம்-விருது, கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சிக்கு 2-ம் பரிசாக ரூ. 5 லட்சம்-விருது, 3-ம் பரிசாக சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் பேரூராட்சிக்கு ரூ.3 லட்சம் பரிசு-விருது வழங்கப்படுகிறது.