சென்னையின் அடையாளங்களுடன் ஒன்று நேப்பியர் பாலம். இந்தப் பாலத்தில் ஏராளமானவர்கள் செல்ஃபி எடுப்பதுண்டு. இந்தநிலையில் நேற்று மாலை ஒருவர் பாலத்தில் செல்ஃபி எடுத்திருக்கிறார். அப்போது அவர் கால் தவறி கூவம் ஆற்றுக்குள் விழுந்துவிட்டார். அவரின் கையிலிருந்த செல்போனும் ஆற்றுக்குள் விழுந்துவிட்டது. கூவம் ஆற்றுக்குள் சிக்கிய அவரால் வெளியில் வர முடியவில்லை. மேலும் அந்த இளைஞர் விழுந்ததையும் யாரும் கவனிக்கவில்லை. அதனால் இரவு முழுவதும் அவர் கூவம் ஆற்றுக்குள்ளேயே தவித்திருக்கிறார்.
இந்தநிலையில் இன்று காலை நேப்பியர் பாலம் வழியாக நடைபயிற்சியில் ஈடுபட்டவர்களுக்கு பாலத்தின் கீழ் பகுதியிலிருந்து ஒருவரின் அபயக்குரல் கேட்டது. அதனால் பாலத்தின் கீழே சிலர் எட்டிப்பார்த்திருக்கின்றனர். அப்போது இளைஞர் ஒருவர் கையை அசைத்து தன்னை காப்பாற்றும்படி கூறியிருக்கிறார். அதைப்பார்த்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும் அண்ணாசதுக்கம் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர், போலீஸார் கயிறு மூலம் இளைஞரை மேலே தூக்கினர்.
அவரிடம் விசாரித்தபோது சென்னை பெரியமேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் எனத் தெரியவந்தது. இவர் செல்ஃபி எடுக்க முயன்றபோது எதிர்பாரதவிதமாக கூவம் ஆற்றுக்குள் விழுந்தது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக்கிற்கு முதலுதவி அளிக்கப்பட்டு அவர் வீட்டுக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். செல்ஃபி மோகத்தில் இதுபோன்ற விபரீதங்களில் யாரும் சிக்க வேண்டாம் என போலீஸாரும் தீயணைப்பு துறையினரும் எச்சரித்தனர்.