தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து நான்கு நாட்களே ஆன பெண் குழந்தையை 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கட்டை பையில் போட்டு தூக்கிச் சென்ற நிலையில், தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து பட்டுக்கோட்டையில் குழந்தையை மீட்டனர்.
தஞ்சை பர்மாகாலனியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது24 ) டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி (22). இவர்களுக்கு கடந்த ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை குடும்பத்தினர் தஞ்சை ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அன்றைய தினம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் ராஜலட்சுமி அனுமதிக்கப்பட்டிருந்த மாடி வார்டில் ஒரு பெண் அவருக்கு என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள் என கூறி உதவி செய்வது போல் நடித்துள்ளார். கடந்த 4 நாட்களாகவே ராஜலட்சுமிக்கு உதவுவது போல் நடித்து அவருடனே இருந்தார். இதனால் அந்த பெண் மீது ராஜலட்சுமி நம்பிக்கை வைத்திருந்தார்.
இன்று காலை அந்த பெண் ராஜலட்சுமியிடம் நீங்கள் குளித்து விட்டு வாருங்கள், நான் குழந்தையை பார்த்து கொள்கிறேன் என கூறினார். இதனை நம்பிய ராஜலட்சுமியும் குளிக்க சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட அப்பெண் பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளங் பெண் குழந்தையை கட்டைபையில் வைத்து கடத்தி கொண்டு வேகமான சென்றார். இதற்கிடையே குளிக்க சென்று விட்டு வார்டுக்கு வந்த ராஜலட்சுமி குழந்தை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். பதறியடித்து கொண்டு பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து உடனடியாக தனது கணவர் குணசேகரனுக்கு தகவல் தெரிவித்தார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்து அவர் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனையில் திரண்டனர். பக்கத்து வார்டில் உள்ளவர்கள் உள்ளிட்ட அனைவரிடம் விசாரித்தனர். ஆனால் குழந்தையின் நிலை தெரியவில்லை. அப்போது தான் ராஜலட்சுமிக்கு அந்த பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இது குறித்து அவர் கணவரிடம் கூறினார். மேலும் இது தொடர்பாக மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கபிலன் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தபோது பெண் கட்டைபையில் குழந்தையை தூக்கி கொண்டு கடத்தி சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் அந்த பெண்ணை தேடி வருகின்றனர். மேலும் நகர் முழுவதும் தகவல் கொடுத்து அந்த பெண் பற்றிய அடையாளங்களை கூறி தேடினர். அரசு மருத்துவமனையில் திருடப்பட்ட பெண் குழந்தையை மீட்க உடனே தஞ்சை தஞ்சை எஸ்பி உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
மருத்துவமனைக்கு வெளியே சென்ற அந்த பெண் ஒரு ஆட்டோவில் ஏறி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிசிடிவி காட்சிகளை வைத்து ஆட்டோவை தேடினர். கடைசியில் ஆட்டோ டிரைவரை பிடித்த தஞ்சை மேற்கு போலீசார் அந்த பெண் எங்கு சென்றார் என்பதையும் கண்டுபிடித்தனர். படிப்படியாக தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் இன்று பட்டுக்கோட்டை அண்ணாநகரைச் சேர்ந்த விஜி என்ற பெண்ணிடமிருந்து குழந்தை கைப்பற்றினர். இதையடுத்து அந்த குழந்தைக்கு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அந்த குழந்தையை பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் தலைமையில் போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சைக்கு அனுப்பி வைத்தனர்.குழந்தையை கடத்திய விஜி அவரது கணவர் பால முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பட்டுக்கோட்டையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை வந்த பச்சிளம் குழந்தையை, அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனையில் உள்ள பெற்றோரிடம் தஞ்சை எஸ்பி ரவளிபிரியா நேரில் ஒப்படைத்தார். அப்போது குழந்தையை பெற்றுக்கொண்ட தாய் ராஜலட்சுமி, உணர்ச்சிவசப்பட்டு ஆனந்த கண்ணீர்விட்டார். மேலும் குழந்தை கடத்தப்பட்ட ஒரே நாளில், காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு குழந்தையை கண்டுபிடித்ததற்கு மருத்துவமனை வளாகத்தில் இருந்த பொதுமக்கள் கைதட்டி பாராட்டினர்.



