உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியா மொத்தமுள்ள 116 நாடுகளில் 101வது இடத்தில் உள்ளது. பசி தீவிரமானது என அடையாளம் காணப்பட்ட 31 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட உலகளாவிய பசி குறியீட்டில் 107 நாடுகளில் இந்தியா 94 வது இடத்தில் இருந்தது. தற்போதுள்ள பட்டியலின்படி, இந்தியாவை விட 15 நாடுகள் மட்டுமே மோசமாக உள்ளன.
பப்புவா நியூ கினியா (102), ஆப்கானிஸ்தான் (103), நைஜீரியா (103), காங்கோ (105), மொசாம்பிக் (106), சியரா லியோன் (106), திமோர்-லெஸ்டே (108), ஹைதீ (109), லைபீரியா (110) ), மடகாஸ்கர் (111), காங்கோ ஜனநாயக குடியரசு (112), சாட் (113), மத்திய ஆப்பிரிக்க குடியரசு (114), யமன் (115) மற்றும் சோமாலியா (116) ஆகியவைதான் நமக்கு பின்னால் இருக்கும் நாடுகளாகும். அண்டை நாடுகள் நம்மை விட இந்த விஷயத்தில் முன்னேறியுள்ளன. பாகிஸ்தான் 92 வது இடத்திலும், நேபாளம் மற்றும் வங்கதேசம் ஆகியன 76வது இடத்தை பகிர்ந்து கொண்டு உள்ளன.
2021 தரவரிசைப்படி சோமாலியாவில் பசியின் அளவு அதிகமாக உள்ளது – அதன் மதிப்பெண் 50.8. இது மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. மத்திய ஆபிரிக்க குடியரசு, சாட், காங்கோ ஜனநாயக குடியரசு, மடகாஸ்கர் மற்றும் யேமன் – மற்றும் 31 நாடுகள் கடுமையான பசி நிலையை எதிர் கொண்டுள்ளன என்று இந்த புள்ளி விவரம் கூறுகிறது. 2000ம் ஆண்டு முதல் உலகளாவிய பசி குறியீடு குறைந்து வருகிறது என்றாலும், முழுமையாக பசியற்ற நாடுகளை உருவாக்குவதை நோக்கி முன்னேற வேண்டியுள்ளது என்று இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
2030ம் ஆண்டுக்குள் பசியற்ற சமூகம் உருவாக வேண்டும் என்ற இலக்கை நோக்கி, நாம் முன்னேற வேண்டியுள்ளது. போசாக்கு குறைபாடு, குழந்தைகள் வீணாக்குதல், குழந்தைகள் வளர்ச்சி குறைபாடு, குழந்தைகள் இறப்பு விகிதம் உள்ளிட்டவற்றை வைத்து பசி குறியீடு உருவாக்கப்படுகிறது. இந்த வகையில் மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியா, இந்த பிரச்சினைகளை சரி செய்ய வேண்டிய தேவையுள்ளது. பொருளாதார வளர்ச்சி, சுகாதாரத் துறை வளர்ச்சி போன்றவைதான் இந்த பிரச்சினையை சரி செய்யும் வழியாகும்.