தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஸ்ரீவைகுண்டத்தில் 18 செமீ மழை பதிவாகியுள்ளது.
குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை, விருதுநகர், சிவகங்கை, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை நீடிக்கும். அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் புவியரசன் கூறினார்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதியில் மழைபெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிமி வேகத்தில் வீசக்கூடும் என்பதால் நாளை மற்றும் நாளை மறுநாள் மன்னார்வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.