அதிராம்பட்டினத்தில் நேற்று நடந்த மக்களை தேடி முதல்வர் என்ற நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துக் கொண்டு மக்களிடம் நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்றார்.
குறிப்பாக அதிரை நகருக்கு தேவையான அத்தியாவசிய அடிப்படை தேவைகள் உள்ளிட்டவற்றையும், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, பட்டா உள்ளிட்ட தனிநபர் கோரிக்கைகளையும் மக்கள் மனுக்களாக அளித்தனர்.
ஆயிரத்திற்கும் அதிகமாக மனுக்கள் இம்முகாம் வாயிலாக தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அளிக்கப்பட்டது. அதில் ஒரு கோரிக்கையாக, அதிராம்பட்டினம் சமூக ஆர்வலர் நூவன்னா தனியே மனு ஒன்றை அளித்தார். அதில் அதிரை நகருக்கு அத்தியாவசிய தேவையான நகருக்கு 110கிலோ வாட் துணை மின் நிலையம் அமைக்க துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், தாம் சார்ந்துள்ள 17வார்டு பகுதியில் வாழும் ஆதரவற்ற முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் உதவித்திட்டம் இவைகளை உடனடியாக செய்து தர வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சரிடம் நேரடியாக அளித்தார்.
மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை உரிய இலாக்கா மூலமாக எடுக்கப்படும் என உறுதியளித்தார்.


