அதிரை நகராட்சி மன்ற துணை தலைவர் பதவி கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் உள்ளூர் திமுக கவுன்சிலர்கள் சதி செய்து அந்த பதவியில் திமுக நகர செயலாளர் இராம.குணசேகரனை அமர வைத்துவிட்டனர். பின்னர் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், உடனடியாக கூட்டணி தர்மத்தை மீறிப்பெற்ற உள்ளாட்சி மன்ற பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என திமுகவினருக்கு கட்டளையிட்டார். இந்த கட்டளையை 10 நாட்கள் ஆகியும் நிறைவேற்றாமல் மாவட்ட திமுக நிர்வாகமும் அக்கட்சியின் கவுன்சிலர்களும் காற்றில் பறக்க விட்டுள்ளனர். குற்ற உணர்ச்சியால் தான் குறுகி நிற்பதாக ஒரு தலைவர் சொன்ன பிறகும் கூட்டணி தர்மத்தை மீறிப்பெற்ற பதவியை திமுக நகர செயலாளர் ராஜினாமா செய்ய தயாராக இல்லை.
அதிரை திமுக சார்பில் வென்றவர்கள் யாரும் தங்களது சொந்த செல்வாக்கில் வெல்லவில்லை. மாறாக மாநிலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி இருக்கிறது. ஆதலால் எங்களுக்கு ஓட்டு போடுங்கள், அப்போது தான் அதிரை ஜெட் வேகத்தில் வளர்ச்சி அடையும் என கூறி ஓட்டு கேட்டு வென்றனர். இங்கு அதிரை திமுக கவுன்சிலர்களுக்கு விழுந்த ஒவ்வொரு ஓட்டும் உதயசூரியனுக்கானது, அதனை தலைமை ஏற்று நடத்தும் மு.க.ஸ்டாலினுக்கானது.
இந்நிலையில், மு.க.ஸ்டாலினுக்காக நாங்கள் போட்ட ஓட்டுகளை வாங்கி வெற்றிபெற்றுவிட்டு இப்போது மு.க.ஸ்டாலினுக்கே அதிரை திமுக கவுன்சிலர்கள் கட்டுப்பட மறுப்பது பேரதிர்ச்சியாக இருப்பதாக வாக்களித்த வாக்காளர்கள் கூறுகின்றனர். மேலும் இனி திமுக கவுன்சிலர்கள் முறையாக வேலை செய்யாவிட்டால் யாரிடம் சென்று முறையிடுவோம் என்றும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.