இஸ்லாமியர்களின் புனித கடமையான ஹஜ் பயண ஏற்பாடு குறித்தான அறிவிப்பை ஒன்றிய அரசு கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்டது. அதில் ஹஜ் பயணிகளின் புறப்படும் இடங்களின் எண்ணிக்கையை 21-லிருந்து 10 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
அந்த பத்து விமான நிலையங்களில் சென்னை இடம் பெறவில்லை.
தென்மாநிலத்தின் முக்கிய புறப்படும் விமான தளமான சென்னையை திட்டமிட்டு தவிர்த்துள்ளனர். கடந்த முறையும் இதே நிலை நீடித்தது . இதனால் ஹஜ்ஜுக்கு செல்லும் பயணிகள் சிரமங்களை சந்தித்தினர்.
சென்னை விமான நிலையமும் மற்ற சர்வதேச விமான நிலையங்களை போன்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். சென்னையிலிருந்து மட்டும் அல்லாமல் புதுச்சேரி, தென் மாவட்டங்கள் மற்றும் அந்தமானிலிருந்தும் கூட கனிசமாக ஹாஜிகள் சென்னை வழியாக ஹஜ்ஜுக்கு செல்கின்றனர். இந்த வழித்தடத்தில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 15,000 க்கும் மேற்பட்ட பயணிகள் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர்.
ஒன்றிய அரசு ஹஜ்ஜுக்கு செல்லும் பயணிகள் சென்னையிலிருந்து புறப்படும் வகையில் அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஒன்றிய மற்றும் மாநில அரசுக்கு அழுத்தம் கொடுத்தது.
இன்னும் சில மாதங்களில் ஹஜ் பயணம் துவங்க உள்ள நிலையில் முஸ்லிம்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. நமது கோரிக்கையை பரிசீலித்த சென்னை உயர் நீதிமன்றம் உரிய நேரத்திற்குள் நமது கோரிக்கையினை பரிசீலனை செய்து முடிவு எடுக்கும்படி ஒன்றிய அரசின் ஹஜ் கமிட்டிக்கு உத்தரவிட்டுள்ளது.