இலங்கை முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த மீனவர்கள் அதிராம்பட்டினம் கடற்பகுதியில் தத்தளித்து வருவதாக அதிராம்பட்டினம் கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் கடலில் தத்தளித்த மீனவர்களை பத்திரமாக மீட்டனர்.
இயந்திரம் பொருத்தப்பட்ட பைபர் படகில், மன்னார் பேச்சாளை-உதயபுரம் நடராஜன் மகன் சுதாகர் (26), முல்லைத்தீவு சிலாவெட்டு பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் ரோசன் (30) இருவரும், கடலுக்குள் மீன் பிடிக்க சென்றதாகவும் போதிய எரி பொருள் இன்மையால் படகின் இயந்திரம் பழுதாகி நின்றதாக கூறப்படுகிறது.
இதனால் பாய்மரத்தை பயன்படுத்தி காற்றின் திசை நோக்கி கரையேற முயற்ச்சித்ததாக அவர்கள் இருவரும் தெரிவித்தனர்.
கடலோர பாதுகாப்பு காவல்துறையினர் படகைக் கைப்பற்றி, இரண்டு மீனவர்களையும் அதிராம்பட்டினம் கடலோர காவல் படை அலுவலகத்திற்கு அழைத்து விசாரித்து வருகின்றனர்.
இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்னிலையால் இலங்கை மக்கள் தமிழகத்தை நோக்கி இடம்பெயர்ந்து வரும் சூழலில் இவர்கள் கூறும் தகவல்கள் உண்மையானவையா அல்லது வேறு காரணங்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக கடலோர பாதுகாப்புக் குழும டிஎஸ்பி சுப்ரமணியன், இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், நுண்ணறிவு பிரிவு தலைமைக் காவலர் வெற்றிச்செல்வன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.