தேசத்துரோக சட்டப் பிரிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். இச்சட்டத்தின் கீழ் எவ்வித வழக்குகளையும் பதிவு செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் எஸ்.ஜி. ஒம்பத்கரே இந்த தேச துரோக சட்ட பிரிவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். கர்நாடகத்தை சேர்ந்த இவர் தாக்கல் செய்த மனுவில், தேசத்துரோக சட்டம் 124-ஏ பிரிவை நீக்க வேண்டும். இது அரசியலமைப்பு சட்டத்தை எதிரானது. மத்திய, மாநில அரசுகள் இதை தவறாக பயன்படுத்துகின்றன என்று கூறி இருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதி என்.வி ரமணா, நீதிபதிகள்,சூர்யா காந்த், ஹிமா கோஹ்லி ஆகியோர் விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் வழங்கப்பட்ட இடைக்கால தீர்ப்பில் தேசத்துரோக சட்டப் பிரிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
இச்சட்டத்தின் கீழ் எவ்வித வழக்குகளையும் பதிவு செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசு இவ்விவகாரத்தில் முடிவு எடுக்கும்வரை எவ்வித வழக்குகளையும் பதிவு செய்யக் கூடாது.
மத்திய, மாநில அரசுகள் இந்த சட்ட பிரிவை இடைப்பட்ட காலத்தில் பயன்படுத்தாது என்று நம்புகிறோம். தேசத்துரோக வழக்கு பிரிவை மறுபரிசீலனை செய்யும் வரை அதனை பயன்படுத்துவது சரியான விஷயமாக இருக்காது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு முடிவு எடுக்கும் வரை இச்சட்ட பிரிவின் கீழ் எந்தவிதமான வழக்குகளையும் பதிவு செய்ய வேண்டாம் என நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. அதேபோல் ஏற்கனவே தேசத்துரோக சட்டப் பிரிவில் போடப்பட்ட வழக்கில் விசாரணை மேற்கொள்வதையும், நடவடிக்கை எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
இடைப்பட்ட காலத்தில் இந்த சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டால், பாதிப்பிற்கு உள்ளாகும் நபர்கள் நீதி மன்றத்தை அணுகலாம். நீதிமன்றம் பாதிக்கப்பட்ட நபர்கள் மீதான தேச துரோக வழக்கை உடனே ரத்து செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.