பட்டுக்கோட்டை அடுத்த கரம்பயத்தில் வசித்து வரும் தங்கவேல், தற்போது பாஜகவில் மாவட்ட பொறுப்பில் உள்ளார். இவரிடம் ரியல் ஸ்டேட் தொழிலுக்காக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அதிரையை சார்ந்த முகம்மது அப்துல் காதர் ஒரு கோடியே 63 லட்ச ரூபாயை கொடுத்துள்ளார். இதனை பெற்றுக்கொண்ட தங்கவேல் பல ஆண்டுகளாகியும் முதலீட்டையும் லாப தொகையையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த முகம்மது அப்துல் காதர், மத்திய மண்டல காவல்துறை தலைவரிடம் தங்கவேலின் மோசடி குறித்து புகார் அளித்திருக்கிறார்.
இதனையடுத்து இந்த புகார் குறித்து வல்லம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிருந்தா நடத்திய விசாரணையில் பண மோசடியில் தங்கவேல் ஈடுபட்டது தெரியவருவதால் மத்திய குற்ற பிரிவில் வழக்கு பதிவு செய்ய ஆவண செய்யுமாறு தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் பரிந்துரை செய்தார். ஆனாலும் இதுவரை இந்த விவகாரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனிடையே தஞ்சாவூர் தாலுகா புதுபட்டினத்தில் உள்ள 47 ஏக்கர் விவசாய நிலத்தை தங்கவேல் ஆக்கிரமிப்பு செய்தது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அப்துல் காதர் உட்பட விவசாயிகள் புகார் அளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த தங்கவேல், பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முகம்மது அப்துல் காதருக்கு எதிராக புகார் அளித்திருக்கிறார். அதில் கடந்த செப்டம்பர் 20ம் தேதி பட்டுக்கோட்டை பைபாஸ் அருகில் தன்னை அப்துல் காதர் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தங்கவேல் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தான் அன்றைய தினம் பட்டுக்கோட்டை செல்லவே இல்லை என மறுக்கும் அப்துல் காதர், பொய் புகாரில் தன் மீது வழக்குபதிவு செய்ய பட்டுக்கோட்டை காவல்துறை முனைப்பு காட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலிடத்தில் இருந்து தங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக காவல்துறையினர் சொல்லுவதாக கூறும் அவர், தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தங்கவேல் மீது உரிய நடவடிக்கையை எடுப்பதுடன் தனக்கு சேர வேண்டிய பணம் இடத்தை பெற்று தருமாறு முதலமைச்சருக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.