தீண்டாமை கொடுமையினால் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு அருகே உள்ள கிளாமங்களம் பகுதியில் பட்டியலின மக்களுக்கு முடி திருத்தம் செய்யக்கூடாது என கட்டுப்பாடு போடப்பட்டிருக்கிறது. மேலும், இரட்டைக் குவளை முறையை பின்பற்றப்பட்டுகிறது என்றும், கடைகளில் பொருட்களை தர மறுப்பதாகவும் பட்டியலின மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பட்டியலின மக்களின் இந்த புகாரினை அடுத்து விசாரணை நடத்திய போலீசார் முடி திருத்தும் கடையை மூடிச் சென்ற வீர முத்துவை கைது செய்துள்ளனர்.
பாப்பாநாடு போலீசார் விசாரணைக்கு வருகிறார்கள் என்று தெரிந்ததும் பட்டியல் இன மக்களுக்கு முடி திருத்தம் செய்ய முடியாது என்று மறுத்த வீரமுத்து கடையை மூடி விட்டு சென்றிருக்கிறார். ஆனாலும் போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
கிளாமங்கலம் கிராமத்தில் டீக்கடைகளில் இரட்டை குவளை முறையும், முடி திருத்தும் கடைகளில் பட்டியலின மக்களுக்கு முடி திருத்தம் செய்யாமலும் பல ஆண்டுகளாக தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருகிறது . இதனால் பட்டியல் இன மக்கள் புகார் அளித்ததின் பேரில் கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி அன்று ஒரத்தநாடு தாசில்தார் உத்தரவின் பேரில் கிராம அலுவலர் ஆய்வு செய்து தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது என்று உறுதி செய்து அறிக்கை அளித்து இருக்கிறார்.
இதன் பின்னர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த மாற்று சமூகத்தினர் பட்டியலின மக்கள் யாருக்கும் மளிகை கடைகளில் பொருள் வழங்கக்கூடாது, முடி திருத்தம் செய்யக்கூடாது என்று கிராம கட்டுப்பாடு விதித்திருக்கிறார்கள். பட்டியலின மக்கள் தெருவுக்கு குடிநீர் வராமல் தடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் மளிகை கடையில் பட்டியலின மக்கள் ஒருவருக்கு பொருட்கள் தர மறுத்திருக்கப்பட்டிருக்கிறது. முடிதிருத்தம் கடையிலும் முடி திருத்தம் செய்ய மறுக்கப்பட்டிருக்கிறது. இதனால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது . இதை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் கிளாமங்கலம் கிராமத்தில் பதற்றம் நிலவி வருகிறது.