அதிரை நகராட்சியில் புதிதாக உயர்த்தப்பட்ட வரியில் குளறுபடிகள் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையான சாலை, வடிகால் வசதிகள் ஏதுமில்லாத பகுதிகளை உயர் வரி பிரிவான A,B பிரிவுகளில் சேர்த்திருப்பதை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுபெற்றுள்ளன. இதனிடையே சொத்துவரியை குறைப்பது குறித்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்த அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம், தற்காலிகமாக சொத்துவரி செலுத்துவதை தாமதப்படுத்துமாறு முஹல்லாவாசிகளை கேட்டுக்கொண்டது. இதன் காரணமாக சொத்து வரி செலுத்துவதை தற்காலிகமாக பொதுமக்கள் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் நகராட்சியில் வரி வசூல் சற்று குறைந்துள்ளது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம் அதிரை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பேசிய வரி வசூலிக்கும் பணியாளர்கள், தங்கள் பகுதியில் முறையான சாலை, வடிகால் வசதியில்லாததால் சம்சுல் இஸ்லாம் சங்க அறிவிப்பை சுட்டிக் காட்டி உடனடியாக வரி கொடுக்க மறுப்பதாக கூறினர்.
இதனிடையே சம்மந்தப்பட்ட பகுதிகளுக்கு விரைவாக சாலை, வடிகால் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்திய திமுக மாவட்ட பொருளாளரும் அதிரை முன்னாள் சேர்மனுமான எஸ்.எச்.அஸ்லம், இதுகுறித்து சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளை அதிரை நகராட்சி சார்பில் நேரில் சந்தித்து பேச வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது குறுக்கிட்ட நகராட்சி துணை தலைவரும் திமுக நகர செயலாளருமான இராம.குணசேகரன், வரி வசூல் குறித்து ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து பேச வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என காட்டமாக கூறினார். கடந்த தேர்தல்களின்போது முஸ்லீம் வாக்கு வங்கியை பெற அதிரை ஜமாத் நிர்வாகிகளின் அப்பாயின்மெண்ட்டிற்காக காத்திருந்ததை இராம.குணசேகரன் மறந்துவிட்டு தற்போது பேசுவதாக விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.