பேரூராட்சியாக இருந்த அதிரை, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஆண்டுகள் உருண்டோடி கொண்டிருக்கும் சூழலில் உட்கட்சிபூசல் காரணமாக முன்னாள் சேர்மன் எஸ்.எச்.அஸ்லமின் மனைவி சித்தி ஆயிஷாவின் 2வது வார்டை நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது. நகராட்சி மன்றம் அமையபெற்று 10 மாதங்களாகியும் 2வது வார்டில் எந்த ஒரு மேம்பாட்டு பணியும் நடைபெறவில்லை.
இந்நிலையில் அதிரையின் மூத்த ஆலிம்களில் ஒருவரான அகமது கபீர் ஆலிம்சா உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் தான் தினந்தோறும் சி.எம்.பி லைனில் உள்ள இஜாபா பள்ளிவாசலுக்கு மாணவர்களுக்கு திருக்குர்ஆனை ஓதி கொடுக்க செல்வதாக குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கண்ணீர்மல்க பேசிய அவர், குண்டும்குழிவுமான பாதையால் அடிக்கடி தான் சைக்கிளிலிருந்து கீழே விழுவதாக கூறியதுடன் அதனால் ஏற்பட்ட காயங்களையும் வீடியோவில் காட்டுகிறார்.
நகராட்சிக்கு சொத்துவரியை நிலுவையில்லாமல் கட்டுவதாக கூறும் கபீர் ஆலிம்சா, தற்போது பதவியில் இருப்பவர்களுக்கு இறைவனிடம் கேள்வி கணக்கு இருக்கிறது என்பதால் பாகுபாடு காட்டாமல் அனைத்து பகுதிகளையும் சமமாக நடத்துமாறு திருக்குர்ஆன் வசனத்தை சுட்டிக் காட்டி தெரிவித்துள்ளார். ஆலிம்கள் பெரும்பாலும் அரசியல் சார்ந்த விவகாரங்கள் குறித்து வாய்த்திறக்க மாட்டார்கள். ஆனால் கண்ணீர்மல்க ஒரு ஆலிம் பேசி வீடியோ வெளியிட்டிருக்கும் சம்பவம் அதிரை மக்களிடையே பேசும் பொருளாகியுள்ளது.