2023ம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அரசு தயாரித்து கொடுத்த உரையில் தமிழ்நாடு, திராவிட மாடல், பெரியார், அண்ணா உள்ளிட்ட வார்த்தைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்காமல் தவிர்த்ததுடன் சிலவற்றை தாமாக சேர்த்துக்கொண்டார். இதனால் தமிழ்நாடு அரசு தயாரித்த ஆளுநர் உரை மட்டுமே அவை குறிப்பில் இடம்பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் கடுப்பான ஆளுநர் ஆர்.என்.ரவி, உடனடியாக அவையிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில் சட்டப்பேரவையில் நாளையதினம் வெள்ளிக்கிழமை முதலமைச்சரின் முக்கியத்துவம் வாய்ந்த உரை இடம்பெற இருப்பதால் அன்றையதினம் அதிரையில் சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை பங்கேற்க இருந்த தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளர் அலுவலகம் திறப்பு விழா ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட பொருளாளர் எஸ்.எச்.அஸ்லம் தெரிவித்துள்ளார். மேலும் பின்னர் அறிவிக்கப்படும் திறப்பு விழா தேதியில் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.