அதிரையில் நூற்றாண்டு பழமையான சூனா வீட்டு பள்ளி என்கிற ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி அமைந்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் படிக்க கூடிய இந்த பள்ளியில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும் என்று அரசுக்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இப்பள்ளிக்கு ரூ.94.89லட்சம் மதிப்பீட்டில் 6 வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளிக்கூட கட்டிடம் கட்டும் பணி சமீபத்தில் துவங்கியது.
இதனையடுத்து கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் சென்னையிலிருந்து திறந்து வைத்தார். பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரும் மேற்கு நகர திமுக பொறுப்பாளருமான S.H.அஸ்லம், ஊராட்சி ஒன்றிய தலைவர் பழனிவேல், வட்டார கல்வி அலுவலர் மீனா சுந்தரி, வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக திறப்பு விழாவுக்கு வருகைதந்த அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்செல்வி வரவேற்றார்.
