
பலரது சொந்த வீடு கனவுக்கு வேட்டு வைக்கும் விதமாக சமீபத்திய கட்டுமான பொருட்களின் விலையேற்றம் திகழ்கிறது. இந்தநிலையில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த கோரி முதல்வர் தனிபிரிவான முதல்வனின் முகவரி துறைக்கு அதிரையில் 36 ஆண்டுகள் கட்டுமான துறையில் அனுபவம் கொண்ட ஆமினா’ஸ் கட்டுமான நிறுவனத்தின் இயக்குநரும் பொறியாளருமான முகம்மது அபூபக்கர் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் ‘தமிழகத்தில் சமீபகாலமாக கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக மணல், எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி உள்ளிட்ட பொருட்களின் விலை ஒரே ஆண்டில் 25% வரை உயர்ந்திருப்பது சொந்த வீடு கனவில் இருக்கும் சாமானியர்களை அதிர்ச்சியடைத செய்திருக்கிறது. வங்கியில் கடன் பெற்று வீடு கட்ட துவங்கி இருப்பவர்களும் கட்டுமான பொருட்களின் விலை அதிகரிப்பால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர். மேலும் கட்டுமான பணியிலும் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. எனவே இவ்விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு கட்டுமான பொருட்களுக்கு நியாயமான விலையை நிர்ணயம் செய்வதுடன் கட்டுமான துறையை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.’ இவ்வாறு அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
சாமானிய மக்களின் நலனுக்காக ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொண்ட ஆமினா’ஸ் கட்டுமான நிறுவனத்திற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.