தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9 மணியளவில் சென்னையில் வஃபாத்தானார் என்று தமிழ்நாடு அரசு தலைமை காஜியின் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
யார் இந்த முப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப்?
கர்நாடக நவாப்களின் அரசவையில் திவானாகப் பணியாற்றிய திவான் முகமது கவுஸ் ஷர்ஃப்-உல்-முல்க் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் இந்த தலைமை காஜி சலாஹுதீன் முகமது அய்யூப். தலைமை காஜி சலாஹுதீன் முகமது அய்யூப்பின் கொள்ளு தாத்தா, காஜி உபைதுல்லா நக்ஷ்பந்தி (ரஹ்மதுல்லாஹி அலைஹி), 1880 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மெட்ராஸ் மாகாணத்தின் (தற்போது தமிழ்நாடு என்று அழைக்கப்படும்) முதல் அரசு தலைமை காஜி ஆவார்.
தலைமை காஜி முப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப், அரபு மொழி மற்றும் இலக்கியத்தில் முதுகலை(M.A), ஆய்வியல் அறிஞர்(M.Phil) மற்றும் முனைவர்(Ph.D) பட்டமும் பெற்றுள்ளார். மேலும் இவர், எகிப்தில் உள்ள அல்- அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் அல் இஜாசதுல் ஆலியா பட்டமும் பெற்றுள்ளார்.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக பணியாற்றி வந்த மௌலவி. முப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப்(அஃப்லலுல் உலமா), இன்று இரவு 9 மணியளவில் சென்னையில் வஃபாத்தானார். தலைமை காஜியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, இவர் சென்னையின் புது கல்லூரியில் அரபு பேராசிரியராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
