அதிரை எக்ஸ்பிரஸ்::- அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் சத்து மாத்திரையை மாற்றி வழங்கும்படி தேசிய சுகாதார இயக்கம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவ மனைகளில் கர்ப்பிணிகளுக்கு சத்து மாத்திரை (கால்சியம் லேக்டேட்) வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அந்த சத்து மாத்திரைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் சத்து மாத்திரை இருப்பு இல்லை. மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளிடம் சத்து மாத்திரையை வெளியில் வாங்கிக் கொள்ளும்படி டாக்டர்கள் சீட்டு எழுதிக் கொடுக்கின்றனர். அதனால், ஏழை கர்ப்பிணிகள் அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வயிற்று உபாதைகள்
இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (டிஎன்எம்எஸ்சி) நிர்வாக இயக்கு நர் உமாநாத்திடம் கூறும்போது, “அரசு மருத்துவமனைகளில் கால்சியம் லேக்டேட் சத்து மாத்திரை, கர்ப்பிணிகள் மட்டுமின்றி தேவைப்படும் அனைவருக்கும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படுகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய சுகாதார இயக்கம் (என்எச்எம்) ஆய்வு செய்ததில், கால்சியம் லேக்டேட் மாத்திரையை உட்கொள்வதால் வயிற்று உபாதைகள் ஏற்படுவதாகத் தெரியவந்தது.
இதையடுத்து கால்சியம் லேக்டேட் மாத்திரைக்கு பதிலாக கால்சியம் கார்போனைட் என்ற சத்து மாத்திரையை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கால்சியம் கார்போனைட் மாத்திரையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில நாட்களில் மாத்திரை தட்டுப்பாடுப் பிரச்சினை தீர்ந்துவிடும்” என்றார்.
மகப்பேறு மருத்துவர்களிடம் கேட்டபோது, “அரசு மருத்துவமனைகளில் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. பிரசவங்களும் அதிக அளவில் நடக்கிறது. கால்சியம் லேக்டேட் மாத்திரைக்கும், கால்சியம் கார்போனைட் மாத்திரைக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. பழைய மாத்திரையில் உள்ள குறைகளை நீக்கி புதிய சத்தான மாத்திரையை வழங்குவது வரவேற்கத்தக்கது. இதனால் அரசு மருத்துவமனை களுக்கு வரும் நோயாளிகள் பயன் பெறுவார்கள்” என்றனர்.