டெல்லி : நாட்டின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் அடுத்த வாரம் பொறுப்பேற்க உள்ளார். தற்போது அப்பதவியில் உள்ள அச்சல் குமார் ஜோதி வரும் திங்கட்கிழமை ஒய்வு பெறும் நிலையில் அப்பொறுப்பை ஓம் பிரகாஷ் ராவத் ஏற்க இருக்கிறார்.இவர் 22வது தலைமை தேர்தல் ஆணையராவார்.
21-ஆவது தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி கடந்த ஜூலை மாதம் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் அவரது பதவிக்காலம் வரும் 22-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.தேர்தல் ஆணையம் என்பது தலைமை தேர்தல் ஆணையர், இரு தேர்தல் ஆணையர்கள் கொண்ட ஒரு அமைப்பாகும். தலைமை தேர்தல் ஆணையராக இரு தேர்தல் ஆணையர்களில் பதவி மூப்பு அடிப்படையில் உள்ள ஒருவரை குடியரசு தலைவர் நியமிப்பது வழக்கம்.
அதன்படி தேர்தல் ஆணையர்களாக உள்ள ஓம் பிரகாஷ் ராவத், சுனில் அரோரா ஆகியோரில் ராவத் மூத்த அதிகாரியாவார். அவரை தலைமை தேர்தல் ஆணையராக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.1977ம் ஆண்டு மத்திய பிரதேசப் பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான ராவத் தற்போது தேர்தல் ஆணையராக உள்ளார்.
அடுத்த மாதம் மேகாலயா, திரிபுரா, நாகலாந்து ஆகிய மாநிலங்களின் தேர்தல் ஓம் பிரகாஷ் ராவத் மேற்பார்வையில் நடைப்பெறவுள்ளது.இதனை தொடர்ந்து கர்நாடக சட்டமன்ற தேர்தலும் ஓம் பிரகாஷ் ராவத் மேற்பார்வையில் நடைபெறவுள்ளது.
நன்றி :- தினகரன்