உனாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்திருந்தார். ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுக்காத நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் இல்லம் முன் அந்த பெண் தீக்குளிக்க முயன்றார். இந்த நிலையில், போலீஸாரால் கைது செய்யப்பட்ட அந்த பெண்ணின் தந்தை மர்மமான முறையில் உயிரிழந்தார்.
நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து எம்எல்ஏவின் சகோதரர் அதுல் சிங் செங்காரை போலீசார் கைது செய்தனர். வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் மீது 3 வழக்குகளை பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், நேற்று காலை முதல் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் அறிவித்தனர்.