கர்நாடகாவிற்கு நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 15ம் தேதி வெளியாகின. இதில் பாஜக 104 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
காங்கிரஸ் 78. மஜத 38 தொகுதிகளில் வென்றன. இதர பிரிவில், 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜகவை ஆட்சியமைக்க அழைத்தார் ஆளுநர் வஜுபாய் வாலா.
இதையடுத்து கடந்த 17ம் தேதி எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் கால அவகாசம் தந்தார் ஆளுநர். ஆனால் காங்கிரஸ் வழக்கு தொடரவே, அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.
காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் ரிசார்ட்டுகளில் பத்திரமாக உள்ளனர். காங்கிரசில் இரு எம்எல்ஏக்கள் மட்டுமே மதியம் வரை சட்டசபைக்கு வரவில்லை. அவர்கள் ஒருவேளை சட்டசபை வராவிட்டாலும் கூட பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல முடியாது.
எனவே ஒருவேளை பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடையும் சூழலை உணர்ந்தால், எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருந்தார். எவ்வளவோ முயன்றும் ஆதரவுக்கு தேவையான எம்எல்ஏக்களை அவரால் பெற முடியவில்லை.
இதையடுத்து சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை இன்று மாலை 4 மணிக்கு தாக்கல் செய்த எடியூரப்பா ஏற்கனவே தயாரித்த 13 பக்க உரையை உருக்கமாக வாசித்தார்.
இதையடுத்து நம்பிக்கை கோரும் தீர்மானத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்த எடியூரப்பா, முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தார். இதனால் கர்நாடக ஆளுநர் காங்கிரஸ் – மஜத கூட்டணியை ஆட்சியமைக்க அழைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.