தஞ்சை பெரிய கோவிலில் 60 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன மாமன்னர் ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள், குஜராத்தில் மீட்கப்பட்டு, நேற்று சென்னை கொண்டு வரப்பட்டன.
தஞ்சை பெரிய கோவிலில் காணாமல் போன இந்த சிலைகள், குஜராத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதாக தகவல் கிடைத்ததது. இதையடுத்து, தமிழக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், நேரடியாக சென்று 150 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை மீட்டார். இவை ரயில் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டன. இந்த சிலைகளுக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பக்தர்கள் தேவாரம் பாடி வரவேற்பு அளித்தனர்.
ராஜராஜ சோழன் சிலை வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, தமிழக தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன், சிலைகளை மீட்டெடுத்த ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுக்கு வாழ்த்து கூறினார். மேலும், தற்போது மீட்கப்பட்ட ராஜராஜ சோழன், லோகமா தேவி சிலைகளின் மதிப்பு 150 கோடி ரூபாய் என்றும், இன்னும் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள், மீட்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், தஞ்சை பெரிய கோவிலில் 20 சிலைகள் காணாமல் போயியுள்ளதாகவும், அவற்றை மீட்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், 3 நாட்களுக்குள் ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகள், தஞ்சை பெரிய கோயிலில் வைக்கப்படும், என்று கூறிய அவர், சிலை கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகள், 100 வயது ஆனாலும் தப்ப முடியாது என்றும், கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்தார்.