தஞ்சை மாவட்டத்தின் கடற்கரையோர பகுதியில் அமைந்துள்ள ஊர் அதிராம்பட்டினம். மக்கள் தொகை அதிகம் கொண்ட இவ்வூர் தேர்வுநிலை பேரூராட்சியாக உள்ளது.
சமீப காலமாக அதிரையில் பேரூராட்சியில் இருந்து ஆய்வுக்கு வந்திருக்கிறோம் என 4 , 5 பேர் கொண்ட குழுவினர் வீடுகளை ஆய்வு செய்கின்றனர். அவர்கள் உண்மையிலேயே பேரூராட்சியில் இருந்து வருகின்றவர்களா ? அல்லது பேரூராட்சியின் பெயரில் வந்திருக்கும் போலிகளா ? என மக்கள் சந்தேகிக்கின்றனர்.
கடந்த வாரம் கூட அதிரை சிஎம்பி லேனில் ரத்தம் எடுக்க வந்திருப்பதாக கூறிக்கொண்டு உள்ளே நுழைந்த போலிகளை தெருவாசிகள் எச்சரிக்கை செய்து அனுப்பிய சம்பவம் கூட அரங்கேறியது.
பேரூராட்சியில் இருந்து ஆய்வு செய்ய வந்திருப்பதாக சொல்பவர்களிடம் அந்த ஆய்வுக்கான அரசின் உத்தரவு நகலோ அல்லது அவர்களுக்கான அடையாள அட்டையோ இன்றி கணக்கெடுப்பு பணியை மேற்கொள்கின்றனர். இதனையே ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி சில சமூக விரோத விஷமிகள் பேரூராட்சியின் பெயரை தவறாக பயன்படுத்தி கணக்கெடுக்கிறோம் என்ற போர்வையில் பெண்கள் மட்டும் தனியாக உள்ள வீடுகளில் நுழைய வாய்ப்புள்ளது.
எனவே அதிரை பேரூராட்சி நிர்வாகம் வருமுன் காப்போம் என்பதன் அடிப்படையில் போர்க்கால நடவடிக்கையாக பேரூராட்சியின் சார்பில் கணக்கெடுப்பு மற்றும் ஆய்வு மேற்கொள்ளும் நபர்களுக்கு அதற்குரிய அடையாள அட்டை மற்றும் ஆய்வு செய்வதற்கான உத்தரவு நகல் ஆகியவற்றை அவர்களுக்கு விரைந்து வழங்க வேண்டும் என அதிரை எக்ஸ்பிரஸ்ஸின் சார்பில் கோரிக்கையாக கேட்டுக்கொள்கிறோம்.