சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி உச்சநீதிமன்ற நீதிபதியாக கொலிஜியத்தால் பரிந்துரை செய்யப்பட்டார். இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக ஹூலுவாடி ஜி ரமேஷ் செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி விஜயா கமலேஷ் ரஹில் தமணி கொலிஜியத்தால் பரிந்துரை செய்யப்பட்டார். இந்த பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகம் ஏற்றுக்கொண்டது.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தஹில் ரமணி இன்று ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் நீதிபதி தஹில் ரமணிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.
தலைமை நீதிபதியாக பதவி ஏற்றிருக்கும் தஹில் ரமணி மும்பை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தலைமை நீதிபதியாக இருந்தவர். கடந்த டிசம்பரில் இருந்து இவர் மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.