கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. லோக்சபா தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்கிறது.
இந்த நிலையில் இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக மக்கள் பல்வேறு நகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு கிளம்பி சென்றனர் ஆனால் போதிய பேருந்து இல்லாமல் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
இந்த நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் பேருந்து இல்லாமல் கடும் அவதிக்கு உள்ளானார்கள். பொதுவாகவே கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பண்டிகை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் நேற்று தேர்தல் காரணமாக நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டம் இன்னும் அதிகம் ஆனது.
இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் இரவு முழுக்க காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. காலை 3 மணி வரை இளைஞர்கள், பெண்கள் என்று பலர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காத்து இருந்தனர் ஆனால் பல ஊர்களுக்கு காலை 5 மணி வரை கூட பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது.
இதையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்து எப்போது வரும் என்று கேட்டு அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம் இளைஞர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதனால் கோபம் அடைந்த போலீசார் அங்கிருந்த மக்கள் மீது லத்தியால் தாக்கி தடியடி நடத்தினார்கள்.
தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற சென்று மக்கள் மீது போலீசார் கொஞ்சமும் மனித தன்மை இல்லாமல் தாக்குதல் நடத்தியதாக மக்கள் கொதித்து போய் இருக்கிறார்கள். போதிய பேருந்துகளை ஏற்பாடு செய்யாதது அரசின் தவறு. அதற்கு மக்கள் மீது தடியடி நடத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.