Home » காரைக்குடி-திருவாரூர் ரயில் சேவையை உடனே துவங்க வேண்டும் – பட்டுக்கோட்டை வட்ட ரயில்பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை !

காரைக்குடி-திருவாரூர் ரயில் சேவையை உடனே துவங்க வேண்டும் – பட்டுக்கோட்டை வட்ட ரயில்பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை !

0 comment

பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் சங்க உறுப்பினர்கள் கூட்டம், பட்டுக்கோட்டை நிலா ஸ்கூலில் கடந்த 27.04.2019 சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்க தலைவர் என். ஜெயராமன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கே. லட்சுமிகாந்தன் முன்னிலை வகித்தார். பொருளாளர் பி. சுந்தரராஜூலு வரவேற்றார்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :

பாராளுமன்ற தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து இப்பகுதி இரயில் சம்பந்தமான கோரிக்கைகளை வைக்க முடிவு செய்யப்பட்டது. காரைக்குடி – திருவாரூர் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்து, இரயில்வே பாதுகாப்பு ஆணையாளரின் சோதனை ஓட்ட ஆய்வுகள் முடிவடைந்தும், இத்தடத்தில் இரயில் சேவை தொடங்கப்படவில்லை. எனவே இத்தடத்தில் சென்னைக்கு இரவு நேர விரைவு இர‌யி‌ல் சேவையை துவங்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்களுக்கு பயன்படும் வகையிலும், இரவு நேரங்களில் சென்னைக்கு செல்லும் இரயில்களுக்கு இணைப்பு இரயில்களாக பயன்படும் வகையில் பயணிகள் இரயில்களை இயக்க வேண்டும். பட்டுக்கோட்டை இரயில்வே நிலையத்திற்கு அருகில் உள்ள சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதியினை ஏற்பாடு செய்து தர வேண்டும். அண்ணா நகர் மற்றும் இசபெல் பள்ளிக்கூடத்திற்கு இடையில் இரயில் பாதைக்கு கீழ் உடனடியாக, பள்ளிக்கூடம் துவங்கும் முன், விடுமுறை காலத்தில் தரைப்பாலம் அமைக்க வேண்டும்.

கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து அதிராம்பட்டினம் இரயில் நிலையத்திற்கு செல்லும் சாலை பழுதடைந்துள்ளது. இச்சாலையை இரயில் சேவை துவங்குவதற்கு முன் சரி செய்ய வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை இரயில்வே நிர்வாகம் நிறைவேற்ற, பட்டுக்கோட்டை பகுதியில் தெருமுனை பிரச்சாரம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் கலியபெருமாள், சுப்பிரமணி, நஜ்முதீன், இராசேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள். முடிவில் செயலாளர் வ. விவேகானந்தம் நன்றி கூறினார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter