மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எதிர் கொள்கின்றனர். இன்று மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கியது. தேர்வு எழுதும் மாணவர்கள் 1.30 மணிக்கு முன்னதாக தேர்வு அறைக்குச் சென்றிருக்கவேண்டும்.
கர்நாடகா மாநிலத்தில் ரயில் 6 மணி நேரம் தாமதமானதால் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் போய்விட்டது. வடக்கு கர்நாடகாவிலிருந்து பெங்களூருக்குச் செல்லும் ஹம்பி விரைவு ரயில் காலை 7 மணிக்கு பெங்களூருவுக்குச் சென்றிருக்கவேண்டும். ஆனால், அந்த ரயில் 2.30 மணி அளவில்தான் பெங்களூருவை சென்றடைந்தது.
சுமார், 6 மணி நேரம் அந்த ரயில் தாமதமாக சென்றடைந்துள்ளது. அந்த ரயில் சென்ற மாணவர்கள் பலர் ட்விட்டர் மூலம் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு புகார் அளித்தனர். ரயில் தாமதத்தால் நீட் தேர்வு எழுத முடியாத சூழல் உருவாகியுள்ளது. உதவ வேண்டும் என்று கோரிக்கைவைத்தனர்.
இதுகுறித்து தெரிவித்த தெற்கு ரயில்வே அதிகாரி, ‘முன்பதிவு செய்த அனைத்து பயணிகளுக்கும் எஸ்.எம்.எஸ் மூலம் ரயில் தாமதம் குறித்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. குண்டகல் பகுதியில் நடைபெற்ற பராமரிப்பு பணியின் காரணமாக ரயில் தாமதமானது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்த முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையா, ‘நூற்றுக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாமல் போய்விட்டது. அந்த மாணவர்கள் மீண்டும் நீட் எழுதுவதற்கு வாய்ப்பு அளிக்கவேண்டும்’ என்று பிரதமர் மோடிக்கு கோரிக்கைவைத்துள்ளார்.