மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய பாஜக அரசு சட்டம் இயற்றியது. பன்னிரண்டாம் வகுப்பில் அதிக அளவிலான மதிப்பெண்கள் பெற்றாலும் நீட் என்ற நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ படிப்பு பயில முடியும் என்ற நிலை உள்ளது.
ஆனால் தமிழ்நாட்டு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் நீட் தேர்வுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நீட் தேர்வால் மாணவ, மாணவிகளின் மருத்துவ கனவுகள் பறிபோவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு வெளியான நீட் தேர்வு முடிவில் தேர்ச்சி பெறாததால் தமிழகத்தின் திருப்பூரைச் சேர்ந்த ரிதுஸ்ரீ என்ற மாணவி மற்றும் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைஸ்யா என்ற மாணவி நேற்று தற்கொலை செய்துகொண்டனர். இது தமிழகம் முழுவதும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த கூனிமேடு குப்பத்தை சேர்ந்த மோனிஷா என்ற மாணவி நீட்டில் தோல்வி அடைந்ததால் இன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நீட் தேர்வினால் தமிழகத்தில் ஆண்டு தோறும் மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமும் ஒரேகுரலில் வலியுறுத்தி வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் செவிடன் காதில் ஊதிய சங்கு போல செயல்படுவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.