தமிழக சட்டசபை கடந்த மாதம் 28-ம் தேதி மீண்டும் கூடியது. அதன்பின்னர் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை மீண்டும் சட்டசபை கூடியது.
அதனைத் தொடர்ந்து மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கியது. வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர்.
இறுதியாக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் பேசினர்.
இந்நிலையில் ஒவ்வொரு துறைமீதும் விவாதம் நடைபெறும் அன்று சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் அன்றன்று ஒவ்வொரு பரிசுகளை வழங்க திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி இன்று காலை வனத்துறை மீதான விவாதம் தொடங்கியது.வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏக்களுக்கு திண்டுக்கல் தலப்பாகட்டி ஹோட்டலில் இருந்து பிரியாணி ஆர்டர் செய்து கொடுத்தார்.
ஒவ்வொரு பையிலும், 3 ஹாட்ஸ்பாக்ஸ்களில் இந்த பிரியாணி வழங்கப்பட்டது. அத்துடன் சிக்கன் அயிட்டங்களும் வழங்கப்பட்டன. மாலை சுற்றுச்சூழல் விவாதம் தொடங்கி முடிந்த பிறகு அத்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் விலையுயந்த சூட்கேஸை பரிசளித்தார்.
இப்படி தினமும் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் அமைச்சர்கள் விதவிதமான பரிசுகளை வழங்க இருக்கின்றனர்.
இந்த விவாதம் 30 நாட்கள் நடைபெற இருப்பதால் எம்.எல்.ஏக்கள் அனைவரும் தினமும் பரிசு மழையில் நனைய உள்ளனர்.