நாகப்பட்டினம் மாவட்டம், பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முகம்மது பைசான், கடந்த 9-ம் தேதி மாட்டு இறைச்சி சூப் சாப்பிட்டுள்ளார். சூப் சாப்பிட்ட புகைப்படத்தை முகம்மது பைசான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.
இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர், முஹம்மது பைசானை கத்தி, இரும்பு கம்பி போன்ற ஆயுதங்களால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த முஹம்மது பைசானை அப்பகுதி மக்கள் மீட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் இளைஞரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடிவந்த போலீசார் அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார், கணேஷ்குமார், மோகன்குமார், அகஸ்தியன் ஆகியோரை நள்ளிரவில் கைது செய்ததுடன் அவர்கள் மீது கொலைமுயற்சி வழக்கை பதிவு செய்துள்ளனர்.
இன்னும் தலைமறைவாக உள்ள பலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
வட மாநிலத்தை போல நாகை அருகே மாட்டு இறைச்சி சாப்பிட்ட இளைஞர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.