ஜம்மு காஷ்மீரில் இப்போதும் தொடர்ந்து கட்டுப்பாடுகள் நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்படுவதற்கு முதல்நாள் இரவு அங்கு இணையம் துண்டிக்கப்பட்டது.
அங்கு செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கவும் அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நிறைய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. காஷ்மீரை சேர்ந்த செய்தியாளர் அனுராதா பாஸின் மற்றும் தேசியவாத காங்கிரஸ் சார்பாக தாக்கல் செய்யப்பட மனுக்கள் அதிக கவனம் பெற்றது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்ஏ நசீர் மற்றும் எஸ்ஏ போட்பே ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை இன்று விசாரித்தது. அதில், காஷ்மீரில் கட்டுப்பாடுகள் நிலவுவது ஏன் ? ஒருவரை மற்றொருவர் சந்திப்பதில் என்ன தவறு. காஷ்மீர் மக்களுடன் இந்தியாவின் பிற பகுதி மக்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும்.
காஷ்மீரில் ஏன் தொலைத்தொடர்பு கட்டுப்பாடு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் இருக்கிறது என்று அரசு விளக்க வேண்டும்.காஷ்மீரில் நிலவும் கட்டுப்பாடு குறித்து மத்திய அரசு 7 நாளில் பதில் அளிக்க வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது.இதற்காக உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதை உடனே எதிர்த்து மத்திய அரசு வழக்கறிஞர்கள் அட்டர்னி ஜெனரல் கே கே வேணுகோபால் மற்றும் சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டனர்.அதில், இது தொடர்பாக நீதிமன்றம் அதிகாரபூர்வ நோட்டீஸ்களை அனுப்பாமல் இருப்பதே நல்லது. அப்படி நோட்டீஸ் அனுப்பினால் அது இந்தியாவிற்கு எதிராக முடியும்.
காஷ்மீர் விவகாரத்தில் அந்த நோட்டீசை மற்ற நாடுகள் எடுத்துக்காட்டாக பயன்படுத்தும்.பிற நாடுகளுக்கு இது சாதகமாக மாறும். இது மிக மிக முக்கியமான விஷயம். அதேபோல் மிகவும் கவனமாக இதை கையாள வேண்டும். இங்கே பேசுவதை ஐநாவில் எழுப்ப வாய்ப்புள்ளது. அதனால் இதில் நோட்டீஸ் அனுப்ப கூடாது என்று வழக்கறிஞர்கள் அட்டர்னி ஜெனரல் கே கே வேணுகோபால் மற்றும் சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டனர்.
இதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், உங்கள் கோரிக்கையை ஏற்க முடியாது. நாங்கள் அதிகாரபூர்வமாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்புகிறோம். எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும், நாங்கள் உத்தரவை பிறப்பித்துவிட்டோம் என்று கூறினார். அதன்பின் காஷ்மீரில் நிலவும் கட்டுப்பாடு குறித்து மத்திய அரசு 7 நாளில் பதில் அளிக்க வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது.