கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டிகே சிவகுமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வரும் நிலையில் 10-க்கும் மேற்பட்ட பேருந்துகளை தீவைத்து கொளுத்தினர்.
பண மோசடி வழக்கு தொடர்பாக நீண்ட நாள் விசாரணைர்ரு பிறகு கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டிகே சிவகுமாரை நேற்று இரவு அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து இன்று மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது.
இந்த நிலையில் மாநிலம் முழுக்க காங்கிரஸ் கட்சியினர் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெங்களூர்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையை காங்கிரஸ் கட்சியினர் வழிமறித்தனர். 4 கர்நாடக மாநில பேருந்துகள் மீது கல்வீச்சு நடத்தினர்.
இதனால் பெங்களூர்- மைசூரு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் பள்ளிகளும் கல்லூரிகளும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. சத்தானூரில் 10-க்கும் மேற்பட்ட பேருந்துகளை செவ்வாய்க்கிழமை இரவு தீவைத்து எரித்தனர்.
இதையடுத்து பாதுகாப்பு கருதி பேருந்துகளை இயக்க வேண்டாம் என கர்நாடக மாநில போக்குவரத்து கழகத்திடம் போலீஸார் கேட்டு கொண்டனர். முதல்வர் எடியூரப்பாவின் வீடு மற்றும் பாஜக அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.
இதனிடையே சிவகுமாரின் கைது பாஜகவின் பழிவாங்கல் நடவடிக்கை என்றும், பொருளாதாரம் மற்றும் ரூபாய் வீழ்ச்சியை மறைத்து, வேலை இழப்பு போன்ற பிரச்சினைகளை மறைக்கும் ஒரு முயற்சி என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.