அதிராம்பட்டினம் பிலால் நகரில் முறையான மழைநீர்/கழிவு நீர் வடிகால் வசதி அறவே இல்லாததால், ஆண்டு தோறும் பெய்யும் மழையால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. பிரதான சாலைகள் முற்றிலும் சேதமடைந்து, சேரும் சகதியுமாகக் காட்சியளித்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மழைநீர் குடியிருப்புகளில் புகுந்து விடுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதியையொட்டி அமைந்துள்ள செடியன் குளம் தென்கரை முதல் ஈஸ்ட்கோஸ்ட் சாலை வரை புதிதாக மழைநீர் வடிகால் வசதி, பழுதடைந்த சாலைகளை சீரமைத்து புதிதாக தார்சாலை வசதி, பிலால் நகர் இணைப்பில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் சாலையை, இப்பகுதி பொதுமக்கள் கடந்துசெல்ல இலகுவாக புதிதாக நடைபாலம் ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியிலிருந்து செய்துதர வலியுறுத்தி, பிலால் நகரை சேர்ந்த தன்னார்வல இளைஞர்கள், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் சி.வி சேகர் எம்.எல்.ஏவை அவரது அலுவலகத்தில் கடந்த ஆண்டு நேரில் சந்தித்து, கோரிக்கை மனுவை அளித்து இருந்தனர்.
இப்பகுதியில், இன்று (செப்.30) அதிகாலை பெய்த பலத்த மழையால், பிலால் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சிதருகிறது. இந்நிலையில், இப்பகுதியில், தொற்றுநோய் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆங்காங்கே தேங்கிக் காணப்படும் மழை நீரை அகற்றவும், குப்பை கழிவுகளை அகற்றவும், பிளீச்சிங் பவுடர் இடவும், கொசு மருந்து புகை அடிக்கவும் கோரி, பிலால் நகர் ஜாமத் நிர்வாகம் சார்பில், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் சி.வி சேகர் எம்.எல்.ஏவை அவரது அலுவலகத்தில் இன்று (செப்.30) பகல் சந்தித்து வலியுறுத்தப்பட்டது. மேலும், பிலால் நகரில் புதிதாக தார்சாலை அமைத்தல், வடிகால் வசதி ஏற்படுத்தல் கோரிக்கை தொடர்பாக பணிகளை விரைந்து முடித்து தர நினைவூட்டல் செய்யப்பட்டன.
கோரிக்கை தொடர்பாக உடனடி நடவடிக்கையை தான் மேற்கொள்வதாக தெரிவித்தார். மேலும், பிலால் நகரில் தேங்கி நிற்கும் மழை நீர், குப்பை கழிவுகளை அகற்றவும், பிளீச்சிங் பவுடர், கொசு மருந்து புகை அடிக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரியை அலைப்பேசியில் தொடர்புகொண்டு வலியுறுத்தினார்.