திருவாரூர்- பட்டுக்கோட்டை- காரைக்குடி அகல இரயில் பாதை உபயோகிப்போர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் என்.ஜெயராமன், செயலாளர் வ.விவேகானந்தம், திருவாரூர் மாவட்ட இரயில் உபயோகிப்போர் சங்க செயலாளர் பேராசிரியர் முனைவர்.ப. பாஸ்கரன், உறுப்பினர் மு.பாரதிதாசன், முத்துப்பேட்டை இரயில் உபயோகிப்போர் சங்க அமைப்பாளர் சுல்தான் இப்ராஹிம் ஆகியோர் இன்று 19-12-19 காலை ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தேசிய இரயில் பயணிகள் சேவை குழுவின் தலைவர் ரமேஷ் சந்திர ரட்டன் மற்றும் உறுப்பினர்கள் எம்.என். சுந்தர், வெங்கட்ரமணி ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
அம்மனுவில் திருவாரூர்- பட்டுக்கோட்டை- காரைக்குடி மார்க்கத்தில் உடனடியாக போதுமான அளவிற்கு கேட்கீப்பர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும்; திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடிக்குச் செல்லும் டெமு இரயிலின் பயண நேரத்தை ஆறரை மணியிலிருந்து மூன்று மணி நேரமாக குறைக்க வேண்டும்; காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை- திருவாரூர் வழியாக சென்னைக்கு இரவு மற்றும் பகல் நேர விரைவு இரயில்களை இயக்க வேண்டும்; ராமேஸ்வரத்திலிருந்து பட்டுக்கோட்டை- திருவாரூர் வழியாக வட மாநிலங்களுக்கு வாராந்திர ரயில்கள் இயக்க வேண்டும்; மீட்டர்கேஜ் காலத்தில் இயங்கிய அனைத்து பாசஞ்சர் இரயில்களையும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட தேசிய இரயில் பயணிகள் சேவை குழுவின் தலைவர், கோரிக்கைகள் புதுடில்லியில் ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.