உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டியது. அயர்லாந்தில் 5,364 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 174 பேர் பலியாகிவிட்டனர். 25 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் அயர்லாந்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் மக்களுக்கு சிகிச்சை அளிக்க அந்நாட்டு பிரதமர் லியோ மருத்துவராக தன்னை பதிவு செய்து கொண்டுள்ளார்.
அவர் வாரத்திற்கு ஒரு முறை மக்களுக்கு சிகிச்சை அளிக்க உள்ளார். லியோ கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவராக பணியாற்றி வந்தார். அவர் அரசியல்வாதியாக மாறிய பின்னர் தனது பெயரை மருத்துவ பதிவிலிருந்து கடந்த 2013ஆம் ஆண்டு நீக்கிவிட்டார்.
தற்போது மீண்டும் மருத்துவ பதிவில் பதிவு செய்துள்ளார் லியோ. இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர் கூறுகையில் லியோவின் நண்பர்களும் குடும்பத்தினரும் சுகாதாரத் துறையில் பணியாற்றி வருகிறார்கள் என்றார்.
இவரது தந்தையும் மருத்துவர்தான். இவரது தாய் செவிலியர். இவரது சகோதரிகள், அவர்களது கணவர்களும் சுகாதாரத் துறையில் பணியாற்றி வருகிறார்கள். அயர்லாந்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து 2 கி.மீ. தூரத்திற்கு மேல் செல்லக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.